புலிகளை அடக்க ஆள் திரட்டுகிறது இலங்கை அரசு
கொழும்பு:
இலங்கையில் விரைவில் புலிகள் எதிர்ப்புப் படை உருவாக்கப்படும் என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே திங்கள்கிழமை தெரிவித்தார்.
இலங்கையில் தனிஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவ வீரர்களுக்கும் கடந்த 17 ஆண்டுகளாகச் சண்டை நடந்துவருகிறது. இந்தச் சண்டையில் இதுவரை 60,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இதற்கிடையே வடக்கு யாழ்ப்பாணத்தில் சண்டையிட்டு வரும் விடுதலைப்புலிகளை அடக்க வேண்டும் என்று இலங்கை அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.
இதுகுறித்து பிரதமர் விக்ரமநாயகே திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழிக்கஇலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக புலிகள் எதிர்ப்புப் படை ஒன்று விரைவில் உருவாக்கப்படும். இந்தப் படையில் சேருவதற்காக பல நகரங்களில் இருந்தும் தன்னார்வ தொண்டர்கள்தேர்வு செய்யப்படவுள்ளனர் என்றார் விக்ரமநாயகே.