பா.ஜ.க.வுடன் கூட்டணியா .. மறுக்கிறார் ஜெ.
சென்னை:
பாரதிய ஜனதாக் கட்சியுடன், அதிமுக கூட்டணி ஏற்படும் என்ற பரவலாக ஏற்பட்ட சர்ச்சைக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைத்தார்.
சில தினங்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பாரதிய ஜனதா ஆதரவு எம்.பி.யும், துக்ளக்ஆசிரியருமான சோவை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து இவர்களது சந்திப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஜெயலலிதா, பாரதிய ஜனதாவுடன்கூட்டணி வைத்துக் கொள்வார் என்றும், தனக்கு கிடைத்துள்ள தண்டனைகளை நிறுத்தி வைக்கக் கோரியும்சோவிடம் கேட்டுக் கொண்டதாகப் புரளி கிளம்பியது.
1998 ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியுடன், அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தது. அதேஅதிமுக 1999 ம் வருடம் வாஜ்பாய் ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக அமைந்தது. தற்போது பாரதிய ஜனதா,அதிமுக வின் அரசியல் எதிரியான திமுக வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் வியாழக்கிழமை சோவுடனான சந்திப்பு குறித்து ஜெயலலிதா நிருபர்களிடம்கூறியதாவது:
நான் சமீபத்தில் துக்ளக் ஆசிரியர் சோவை சந்தித்துப் பேசினேன். இதில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை.பாரதிய ஜனதா கட்சியுடன், அதிமுக கூட்டணி வைத்துக் கொள்வது குறித்தெல்லாம் பேசப்படவில்லை.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகதான் ஆட்சியமைக்கும். அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுகவை தோற்கடிப்பதே அதிமுகவின் முக்கியக் குறிக்கோள். நடுநிலையுடன்செயல்படும் கட்சிகள் கூட்டணி அமைக்க முன்வந்தால் அவர்களை முழு மனதுடன் வரவேற்போம்.
திமுக வுக்கு எதிராக உள்ள கட்சிகளை இணைத்து மஹா கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா திட்டமிடுகிறார் என்று கருணாநிதி கூறுகிறார். அது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை.
வரும் சட்டசபைத் தேர்தலில் சசிகலா நடராஜன் போட்டியிடுவாரா என்று கேட்கிறார்கள். அதுகுறித்து இன்னும்முடிவு செய்யவில்லை என்றார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications