கோபி கோர்ட்டில் நக்கீரன் கோபால் சாட்சியம்
கோபி:
வீரப்பன் கூட்டாளிகள் மீதான வழக்கில், கோபி கோர்ட்டில் நக்கீரன் கோபால் சாட்சியம் அளித்தார்.
தாளவாடி அருகே அதிரடிப்படையினர் சில ஆண்டுகளுக்கு முன்பு ரோந்து சென்ற போது அங்கு வீரப்பன் கூட்டாளிகள் பதுங்கி இருந்தனர். அதிரடிப்படையினர்அவர்களைப் பிடிக்க முயன்ற போது வீரப்பன் கூட்டாளிகள் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த வழக்கில் வீரப்பனின் கூட்டாளிகள் மகாதேவன், ஜெயராமன், சுரேஷ், துப்பாக்கிச் சித்தனின் மனைவி சிக்குமாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அப்போது தப்பித்துச் சென்ற துப்பாக்கிச் சித்தன் கோபால் மூலம் கோர்ட்டில் சரணடைந்தார்.
இவர்கள் மீதான வழக்கு கோபி கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்கள் 5 பேரும் புதன்கிழமை கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நக்கீரன் கோபால் இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கோபி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:
துப்பாக்கிச் சித்தன் என்னிடம் வந்து சரணடைய விரும்புவதாகத் தெரிவித்தார். இதுகுறித்து நான் முதல்வரிடம் தெரிவித்தேன். அவர் அப்போதையஐ.ஜி.காளிமுத்துவிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.
உடனடியாக நான் எனது உதவியாளர்களுடன் சென்று துப்பாக்கிச் சித்தனை ஐஜியிடம் ஆஜர்படுத்தினேன். இதற்கு நன்றி தெரிவித்து ஐஜி எனக்குக் கடிதம்எழுதியுள்ளார் என்றார் கோபால்.
கோபி கோர்ட்டில் நீதிபதி நூர் முகமது முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர் விசாரணையை அடுத்த மாதம் 3 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.