தூத்துக்குடியைப் புயல் தாக்குமா?
சென்னை:
வங்கக் கடலில் உருவான கடும் புயல் புதன்கிழமை காலை தமிழகத்தில் தூத்துக்குடிக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவானது. அது செவ்வாய்க்கிழமை பிற்பகல் கடும் புயல்சின்னமாக மாறி தென் கிழக்கு திசையில் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டது.
இது வடக்கு இலங்கை வழியாக தமிழகத்தை நோக்கி வருகிறது. புயல் சின்னம் புதன்கிழமை தூத்துக்குடிக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக்கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கை:
அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி,ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 140 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
புயல் கரையைக் கடக்கும் போதும் கடலில் கொந்தளிப்பு இருக்கும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம்,தரங்கம்பாடி, வேதாரண்யம், பழையாறு கடலோரப் பகுதிகளில் 10 அடி உயரத்துக்கு கடலில் ராட்சச அலை எழும் அபாயமும் உள்ளது.
மேலும் வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த 2,000 மீனவர்கள் கடலுக்குவரவில்லை.
வேரோடு சாய்ந்த மரங்கள்:
பூம்புகார், செம்பனார், திருக்கடையூர், வைதீஸ்வரன் கோவில் திருவெண்காடு பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருக்கிறது. 50 முதல் 70கிலோமீட்டர் வரை காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இப்பகுதிகளில் உள்ள வாழை மரங்கள், தென்னை மரங்கள் சாய்ந்தன.
தஞ்சை மாவட்டத்தின் கடலோரப்பகுதியான அதிராம்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மழை பெய்து வருகிறது.
நெல்லையில் பிற்பகல் 2 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மாலை 5.30 மணி வரை மழை தொடர்ந்தது. தூத்துக்குடியில் பிற்பகல் முதல்மாலை வரை குளிர் காற்று வீசியது. மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் மழை நின்று விட்டது.
இலங்கை அருகே வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் அங்கிருந்து தமிழகம் வழியே கடலைக் கடக்கிறது. 1978 ம் ஆண்டு முதல், வங்கக் கடலில்உருவாகும் புயல் இலங்கை வழியே கரையைக் கடந்து வருகிறது. அந்த ஆண்டு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் பல வீடுகள் சேதமடைந்தன.
தற்போது வீசிய புயலில், கொழும்பிலிருந்து 255 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வவுனியாவில் ஒரு குழந்தை இறந்தது. இப்பகுதியில் பல வீடுகள் இடிந்துவிழுந்ததில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. அங்கிருந்த பலர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவ வீரர்களுக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கும் இடங்களும் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்தன. சில வீடுகளின் கூரைகள் சூறாவளிக் காற்றில் பறந்தன. மரங்கள் வேரோடுசாய்ந்து விழுந்துள்ளன. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவைகள்மிகவும் தாமதமாக வந்து சேரும்.
புயலால் பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள பள்ளிகள், கோவில்கள் மற்றும் சமூக சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications