அரசு ஊழியர்கள் இடமாற்றத்துக்குத் தடை
சென்னை:
2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களின் இடமாற்றத்தை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தமிழகத்தில் 2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கணக்கெடுப்புப் பணியில் பெரும்பாலும்ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தவிர அரசின் வருவாய்த்துறையிலிருந்தும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் கடந்த மாதம் முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிவடைந்தபின் கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதற்கிடையே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பாதிக்கப்படும் என்ற காரணத்தால் கணக்கெடுப்பவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும்தற்காலிக இடமாற்றத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஊழியர் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள தாசில்தார், நகராட்சி, மற்றும் மாநகராட்சிஆணையர்கள் அனைவருக்கும் வரும் 2001 மார்ச் வரை இடமாற்றத்துக்குத் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இடமாற்றம் கண்டிப்பாக தேவைப்பட்டால் தவிர மார்ச் மாதம் வரை அரசு ஊழியர்கள் இடமாற்றம் பெற முடியாது.