இந்தியா வருகிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனை குறித்து பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர் பெர்வீஸ் முஷாரப்பும் டெல்லியில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.
இதையொட்டி முஷாரப்பை முறைப்படி இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் வாஜ்பாய் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர், அதிபர்முஷாரப்பை சந்தித்து அழைப்புக் கடிதம் கொடுப்பார்.
வாஜ்பாயின் அழைப்பை ஏற்றுக் கொண்டு இம்மாத இறுதியில் முஷாரப் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசுஅதிகாரிகள் இந்தத் தகவலை வியாழக்கிழமை தெரிவித்தனர்.
முஷாரப்பின் இந்திய சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். முஷாரப்பின் இந்தப் பயணம்வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அளித்த பேட்டி:
காஷ்மீர் பிரச்சனை குறித்து இந்தியாவுடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பேச்சு நடத்தத் தயார் என்று மீண்டும், மீண்டும் 4 முறை கூறி விட்டேன்.ஆனால் இந்தியாவிடம் இருந்து பதில் வரவில்லை. எனது அறிவிப்புக்கு இந்தியா சாதகமான பதிலை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதேநேரத்தில் காஷ்மீர் சுதந்திரப் போராட்டத்துக்கு பாகிஸ்தானின் தார்மீக ஆதரவு தொடரும் என்றார் முஷாரப்.
முன்னதாக காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக இந்திரா காந்தி - பூட்டோ இடையே சிம்லா ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்பிறகு சமீபத்தில்வாஜ்பாய் - நவாஸ் ஷெரீப் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
ஆனாலும் இந்த 2 ஒப்பந்தங்களையும் பாகிஸ்தான் மதித்து நடக்கவில்லை. அதற்குப் பதிலாக தீவிரவாதிகளையும், வெளிநாட்டு கூலிப்படையினரையும்காஷ்மீருக்கு அனுப்பி வன்முறையைத் தூண்டி விட்டு வருகிறது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.