எஸ்ட்ரேடா விலகினார் .. அரோயா அதிபரானார்
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில், துணை அதிபராகப் பதவி வகித்து வந்த க்ளோரியா அரோயா சனிக்கிழமை பிலிப்பைன்சின் புதிய அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார்.
லஞ்ச வழக்கில் சம்பந்தப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ஜோசப் எஸ்ட்ரேடாவுக்கு மக்கள் ஆதரவு குறைந்ததோடு, சட்டரீதியாகவும் நெருக்கடிஏற்பட்டது. இருந்தும் கூட அவர் அதிபர் பதவியிலிருந்து விலக மறுத்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு எஸ்ட்ரேடாவுக்கு எதிராகபிலிப்பைன்ஸ் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தச் சூழ்நிலையில், அதிபர் பதவியிலிருந்து எஸ்ட்ரேடா விலகியுள்ளார். துணை அதிபர் குளோரியா அரோயா புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
தலைநகர் மணிலாவில் எட்சா ஆலயத்தின் முன் அரோயாவின் ஆதரவாளர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் க்ளோரியா கூறுகையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபராக இருந்த நான் அதிபராக பதவியேற்கிறேன். நான் ஒரு அதிபர் என்றமுறையில் எனது பணிகளைத் திறம்படச் செய்வேன். நாட்டு மக்களின் நலனிற்காகப் பாடுபடுவேன். எனக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்என்று பைபிள் மேல் சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
நாட்டின் பொறுப்புக்களை கையில் எடுத்துக் கொண்டு அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் நடந்து கொள்வேன் என்றும் அவர் கூறினார்.
அரோயாவின் தந்தை முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications