வீரப்பன்: துப்புத் தந்தால் 20 லட்சம் பரிசு
மைசூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றித் துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக,கர்நாடக அரசுகள் அறிவித்துள்ளன.
சமீபத்தில் வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்ட பிறகு வீரப்பனைப் பிடிப்பதற்கானஆயத்தங்களில் இரு மாநிலங்களும் இறங்கின.
தமிழக, கர்நாடக அதிரடிப்படை நவம்பர் மாதம் 20 ம் தேதி முதல் தேடுதல் வேட்டையைத் தொடங்கின. எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்களும் நவீன ஆயுதங்களுடன் சத்யமங்கலம் காட்டுக்குள் புகுந்தார்கள்.
இவர்கள் கடந்த 2 மாதங்களாகப் போராடியும் வெற்றி கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து வீரப்பனைப் பிடிக்கபுதிய அணுகுமுறையைப் பயன்படுத்துவது என தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் முடிவு செய்தன.
புதிய அணுகுமுறைப்படி, வீரப்பனைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ 20 லட்சம் பரிசளிக்கப்படும் என்றும்வீரப்பனின் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன் மற்றும் சந்திரன் ஆகியோர் குறித்துத் தகவல்கொடுப்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வழங்கப்படும் என்றும் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் தமிழக, கர்நாடகமாநில அரசுகள் சார்பில் வீரப்பன் ஒளிந்திருக்கும் காட்டுப் பகுதியில் வீசப்பட்டுள்ளன.
இரு மாநில அரசுகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 122 கொலை, 2,000 யானைகளைக் கொன்றது, 1000 சந்தனக்கட்டைகள் கடத்தப்பட்டது ஆகியவை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதனால் வீரப்பனுக்கு யாரும் உதவி செய்யக் கூடாது என எச்சரிக்கப்படுகிறார்கள். இதையும் மீறி வீரப்பனுக்குஉணவுப் பொருட்களை அனுப்புவது, அதிரடிப்படை நடவடிக்கை பற்றி வீரப்பனுக்குத் தகவல் கொடுப்பது போன்றசெயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த துண்டுப் பிரசுரத்தில்கூறப்பட்டுள்ளது.