கண்ணீரில் மிதக்கிறது குஜராத்
காந்திநகர்:
குஜராத்தில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் சாவு எண்ணிக்கை 10, 000 மாக உயர்ந்துள்ளது. 30, 000 பேர் காயமடைந்துள்ளனர் என்று மாநிலகாவல்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா சனிக்கிழமை தெரிவித்தார்.
பூகம்பம் குறித்து குஜராத் மாநில காவல்துறை அமைச்சர் பாண்டியா நிருபர்களிடம் கூறியதாவது:
இதுவரை 2,500 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கட்ச் மட்டும் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளது.
கிரேன்கள் மூலம் பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில தீயணைப்புப் படையினர் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
சூரத்தில் 34, மோர்பியில் 200, ஜாம்நகரில் 100, சுரேந்திரநகரில் 78 பிணங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதியில்உள்ள கட்ச் மாவட்டம் உருத்தெரியாமல் காட்சியளிக்கிறது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 30,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கட்ச் மாவட்டத்தில் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மரங்கள், தொலைபேசி மற்றும் மின்சார வயர்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன.முதல்வர் கேசுபாய்படேல் கட்ச் க்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். டாக்டர்கள், சமூக சேவை செய்பவர்கள், என்ஜினியர்கள்மற்றும் மீட்புப்பணியில் ஈடுபடுபவர்கள் கட்ச் விரைந்துள்ளனர்.
அரிசி, பால், கம்பளிகள், ரொட்டி, மண்ணெண்ணெய் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
சோனியா விரைகிறார்:
இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை மாலை குஜராத் சென்று பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப்பார்வையிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு ரயில்கள்:
குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் உதவி செய்யும் விதத்தில் 5 புதிய ரயில்கள் விடப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர்மம்தா பானர்ஜி சனிக்கிழமை தெரிவித்தார். இந்த 5 ரயில்களும் மாலை 4 மணிக்கு மருத்துவ மற்றும் இதர நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டுகுஜராத் செல்லும். இந்தியாவின் 5 முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மும்பை மற்றும் சென்னையிலிருந்து ரயில்கள் குஜராத்செல்லும் என்றார் அவர்.
யு.என்.ஐ.