ரூ. 1 லட்சம் போலி மருந்து பறிமுதல்
ஹைதராபாத்:
மகாராஷ்டிர நிறுவனம் ஒன்று அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போலி மருந்துகளை ஆந்திர மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரிலிருந்து இயங்கி வருவது பாரத் சீரம் மற்றும் வாக்சின் நிறுவனம். இந்த நிறுவனத்திடமிருந்து ஹைதராபாத்போலீஸுக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சரவணன் என்பவரை கைது செய்து அவரின் வீட்டை சோதனை செய்தபோலீசார் அங்கிருந்து மருந்துகள் மற்றும் அவருடன் இணைந்து போலி மருந்துகள் கடத்துவதில் ஈடுபட்டிருப்பவர்களின் விபரங்களையும் கைப்பற்றினர்.
பின்னர் ஹைதராபாத், குண்டூர், கரீம்நகர், வாரங்கல், கம்மம், கிருஷ்ணா ஆகிய இடங்களில் மருந்துக் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சோதனையில் 1,17,600 ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகளை கைப்பற்றினர்.
மேலும், ஹைதராபாத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் போலி மருந்துகள் சப்ளை செய்வதில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.இத்தகவல்களை மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.