சோனியா வருகை ..மயிலாடுதுறையில் பாதுகாப்பு
நாகப்பட்டினம்:
விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்து வருகிறது எனக் கோரி அவர்களுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் காங்கிரஸ் மாநாடு நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா சனிக்கிழமை வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிகள் பற்றி நாகப்பட்டின மாவட்ட எஸ்.பி அபய்குமார் சிங் வியாழக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்,சென்னையிலிருந்து சோனியா காந்தி ஹெலிகாப்டர் மூலம் சனிக்கிழமை மாலை மயிலாடுதுறை வருகிறார். ஹெலிகாப்டர் ராஜன் தோட்டத்தில்வந்திறங்கும்.
பின் அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் மாநாடு நடைபெற இருக்கும் ஞானாம்பிகை பெண்கள் கல்லூரிக்கு செல்கிறார். 5 மாவட்ட கண்காணிப்பாளர்கள், 15 துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநாடு நடைபெற இருக்கும் இடத்திற்கு அருகில் குடியிருப்போரிடம் அவர்கள் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது.
லாட்ஜ்கள் மற்றும் திருமண மண்டபங்கள் சோதனையிடப்படுகிறது மயிலாடு துறைக்குள் வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின் தான்அனுமதிக்கப்படுகிறது.
வி.ஐ.பி.களுக்கு அடையாள அட்டை காவல் துறையினரால் வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள்வரவழைக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என கூறினார்.