ஊட்டி: இன்னொரு காதல் ஜோடியும் சாவு
ஊட்டி:
ஊட்டியில் ஒன்றாக விஷம் குடித்த 3 மதுரை காதல் ஜோடிகளில் இரண்டாவது ஜோடியும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். 3 வது ஜோடியும் உயிருக்குப்பேராடிக் கொண்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஊட்டிக்கு 3 காதல் ஜோடிகள் வந்தனர். இவர்கள் அனைவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள். 18 முதல் 21 வயதுமட்டுமே நிரம்பிய இக் காதல் ஜோடிகள், தங்கள் பெற்றோர்களைப் பகையாளியாக நினைத்தனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததே இதற்குக் காரணம். காதலர் தினத்தில் சிறகடித்துப் பறந்த இந்த ஜோடிகள், ஊட்டிக்குச்சென்று உல்லசமாகப் பொழுதைக் கழித்தனர். பின்னர், ஒன்றாக எல்லோரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
ஊட்டியில் தங்கியிருந்த ஹோட்டலில் எல்லோரும் ஒன்றாக விஷம் குடித்தனர். ஆனால், உடனே இவர்களை மரணம் அழைத்துக் கொள்ளா விட்டாலும்,ஒவ்வொரு ஜோடியாக அழைத்துக் கொண்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த காதல் ஜோடியில் கருணாகரன்-தேவி ஜோடி மரணம் அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை மதுரைஅய்யன்கோயில் தெருவைச் சேர்ந்த கோபிநாத்- கற்பகம் ஜோடியும் இறந்து போயினர்.
இதையடுத்து இறந்த காதல் ஜோடிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இறந்த நான்கு பேரின் உடல்களும் ஊட்டியிலேயே புதைக்கப்பட்டு விட்டன.இன்னும் மீதமுள்ள ஒரு ஜோடியும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.