தொழில் நுட்பக் கல்வியில் அமைதிப் புரட்சி
திருச்சி:
தமிழகத்தில் தொழில் நுட்பக்கல்வியின் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்த மாநில அரசு முயன்று வருவதாக தமிழக மேல்நிலைக்கல்வித் துறைசெயலாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை நிகழ்த்திய அவர்,
இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக அளவில் தொழில்நுட்ப கல்லூரியிலும், பாலிடெக்னிக்குகளிலும் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.மாறிவரும் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு ஏற்ப அத்துறைக்கான பாடத் திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் கல்வி மேம்பாடிற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2000-2001ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் தகவல்தொழில்நுட்பத் துறையில் ஒரு அமைதிப்புரட்சி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது.
பணிபுரிவோருக்காக மாலை நேர மற்றும் பகுதி நேர பொறியியல் படிப்புகளை தொடங்கவும், கலை அறிவியல் துறை,பொறியியல் துறைகளிலும் இரட்டை பட்டங்களை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
பல்கலைக் கழகங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியினை வழங்க வேண்டியது அவசியம்.தனியார் கல்வி அமைப்புகளும் அரசுடன் இணைந்து கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவ வேண்டும்.
தற்போது முதன் முறையாக அரசுக் கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் கம்ப்யூட்டர்கல்வி விரைவில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications