த.மா.கா அரசியல் பற்றி தெரியாது என்கிறார் சிதம்பரம்
கோவை:
""தமிழ் மாநில காங்கிரஸ் அரசியல் நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்கிறார் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்குவதில் பக்கபலமாகவும், அதில் முக்கிய அங்கம் வகிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அரசியல்மேடைகளில் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
பொதுக் கூட்ட மேடைகளில் மட்டுமின்றி, கட்சிக்குள்ளும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாத அதிருப்தியில் இருந்து வரும் சிதம்பரம் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதாக் கட்சியில் இணையும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுவரை அவர் இது குறித்துமுடிவு எதையும் மேற்கொள்ளவில்லை. கோவையில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழா ஒன்றிற்கு வந்த ப.சிதம்பரம் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் சுருக்கமான பதில்களையே கூறினார்.
அவர் கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பற்றி தமிழ் மாநில காங்கிரஸ் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.தமிழ்மாநில காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டு சேருமா என்பது பற்றியும் தெரியாது. தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்ட போது,என்னிடம் கட்சி எந்த ஆலோசனையும் கேட்கவில்லை.
தேர்தல் ஆலோசனைக் குழுவில் நான் இடம் பெறுவில்லை என்பதை செய்தித் தாள்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இப்படி இருக்கும்போது நான்எப்படி, பதில் கூற முடியும். தமிழ்மாநில காங்கிரசின் அரசியல் நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
என்னை தமிழ் மாநில காங்கிரசின் மூத்த தலைவர் என்றோ, அல்லது முன்னணித் தலைவர் என்றோ வருணிக்காதீர்கள். எனக்கொன்றும் வயதாகிவிடவில்லை. தேர்தல் பணி தொடர்பாக என்னைஅழைத்துப் பேசினால் அது தொடர்பாக முடிவெடுப்பேன்.
அ.தி.மு.க., வுடன் நடந்த பேச்சுவார்த்தை, தி.மு.க.,வுடன் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை 3வது அணி அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைஎன்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த கூட்டணி அமைப்பதில் ஒரு கொள்கையும் குறிக்கோளும் வேண்டும் என தெரிவித்திருந்தேன் என்றார்சிதம்பரம்.