தேர்தலில் போட்டியிடுகிறது நாயுடு இன கூட்டமைப்பு
கோவை:
வரும் சட்டமன்றத் தேர்தலில் 97 தொகுதிகளில் நாயுடு இனக் கூட்டமைப்பு போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேட்பாளர்பட்டியலுடன் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் என இதன் தலைவர் கெங்குசாமி நாயுடு தெரிவித்தார்.
தமிழ்நாடு கம்மவார் நாயுடு மகாஜன சங்கம், தமிழ்நாடு தெலுங்கர் இன சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன.இந்தக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த தலைவராக இப்போது கெங்குசாமி நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
தமிழகத்தில் நாயுடு சங்கத்தினர் 2 கோடி பேர் உள்ளனர். வெல்மா, ரெட்டி, பலிஜா, கம்மா, காப்பு என பல்வேறு பிரிவுகளின்கீழ் நாயுடு இன மக்கள்பிரிந்து கிடக்கின்றனர். இவர்களோடு தெலுங்கு, செட்டியார், கன்னடி நாயுடு, ரவுத், போன்ற சங்கத்தினரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்சேர்க்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்தும் எவ்வித பலனையும் பெற முடியாமல் உள்ள மாதிகா, ஆதி ஆந்திரா பிரிவினருக்கு தனியாக தாழ்த்தப்பட்டோர்பட்டியலில் 10 சதவீதம் அளிக்க வேண்டும். இது போன்ற 12 கோரிக்கைகளை முன் வைத்து தேர்தலில் வாக்குறுதி அளிக்கவுள்ளோம்.
இது குறித்து தி.மு.க அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. எனவே வரும் சட்டமன்றத்தேர்தலில் 97 தொகுதிகளில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். இந்த நிலையில் எங்களை அ.தி.மு.க.,வும் , 3வது அணி அமைக்க முயன்றுவருபவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். எங்கள் கோரிக்கையை உறுதியாக நிறைவேற்றித் தரும் அணியுடன் நாங்கள் கூட்டு வைத்துக் கொள்ளத் தயாராகஉள்ளோம்.
வரும் மார்ச் 5ம் தேதி சென்னை சீரணி அரங்கில் நாங்கள் நடத்தவுள்ள மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.இந்த மாநாட்டில் தேர்தலில் போட்டியிடும் தொகுதி, அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என கெங்குசாமி நாயுடு தெரிவித்தார்.