சொத்துக்களை ஒப்படைத்தது நவாஸ் குடும்பம்
இஸ்லாமாபாத்:
ஆள் கடத்தல், கொலை முயற்சி ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் குடும்பத்தார், லாகூரில் உள்ள தங்களது 2பங்களா வீடுகளை தனிநபர் சொத்துக் கண்காணிப்புக் குழுவினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, தனிநபர் சொத்துக் கண்காணிப்புக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நவாஸ் ஷெரீப் குடும்பத்தார், ரூ 50 கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை எங்களிடம் அபராதத் தொகையாகக் கொடுத்தனர். மேலும் லாகூரில்தங்களுக்குச் சொந்தமான சொத்து மற்றும் பிற பொருட்களை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளார்கள்.
ஏனெனில் ஊழல், ஆள்கடத்தல், கொலை முயற்சி ஆகிய குற்றங்களில் தொடர்புடைய நவாஸ் ஷெரீப் குடும்பத்தார் அபராதத் தொகையாக லாகூரில் உள்ளதங்களது இரண்டு பெரிய வீடுகளைத் தருவதாகக் கூறியிருந்தார்கள். அதன்படி தற்போது கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பல குற்றங்களில் தொடர்புடைய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு 5 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. அவர் அடுத்த20 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தர விட்டது.
சில மாதங்களுக்கு முன் நவாஸ் ஷெரீபும், அவரது குடும்பத்தாரும் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்,ஷெரீபின் அசையும், அசையாச் சொத்துக்களை சீல் வைக்கும்படி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.