வாஜ்பாய் அரசு தானாக கவிழும் : ஜெய்பால் ரெட்டி
டெல்லி:
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை காங்கிரஸ் கட்சி கவிழ்க்காது. ஆனால், ஆயுத பேர ஊழலால்அக்கூட்டணியில் நிலவும் குழப்பங்களே வாஜ்பாய் அரசை கவிழ்த்து விடும் என காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் ஜெய்ப்பால் ரெட்டி கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெய்பால் ரெட்டி கூறியதாவது:
மத்திய அரசை கவிழ்க்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடாது. தெஹல்கா இணையதளம் வெளிப்படுத்திய ஆயுதபேர ஊழலை அடுத்து அந்த கூட்டணியில் நிலவும் குழப்பங்களால் வாஜ்பாய் அரசு தானாக கவிழ்ந்து விடும்.
ஆயுத பேர ஊழல் வெளியானதை அடுத்து அக்கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிவெளியேறியது. வாஜ்பாய் நடத்திய ஆயுத பேர ஊழலுக்கு எதிரான பேரணியில் தேசிய ஜனநாய கூட்டணியில்இருக்கும் கருணாநிதி, சந்திரபாபு நாயுடு போன்றோர் பங்கேற்கவில்லை.
அது போல் பா.ஜ.க.வின் நீண்ட நாள் தோழமைக் கட்சியான சிவசேனைக் கட்சி கூட இந்த ஊழல் தொடர்பாகபிரதமர் அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வருகிறது.
பிரதமரின் முதன்மை ஆலோசகர் பிரஜேஸ் மிஸ்ரா மற்றும் என்.கே.சிங்கை அங்கிருந்து நீக்க வேண்டும் என்கிறார்சிவசேனை தலைவர் பால் தாக்கரே.
அதோடு, பிரதமரின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவிற்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பது குறித்து விசாரிக்கவேண்டும் என சிவசேனை கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.
இவை அனைத்தும் அந்த கூட்டணியில் குழப்பம் நிலவுவதை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரைமத்திய அரசை கவிழ்க்க முயற்சிக்காது.
மத்திய அரசு தானாக கவிழ்ந்த பிறகு இடைத்தேர்தல் வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. எனினும், பா.ஜ.க.அரசு எவ்வாறு கவிழ்கிறது என்பதை பொறுத்து காங்கிரஸ் கட்சி தனது திட்டங்களை வகுக்கும்.
ஆயுத பேர ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது கண் துடைப்பான நடவடிக்கையே. ஏனெனில்,ஊழல் குறித்த ஆதாரங்கள் இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுகாலம் கடத்துவதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.
காங்கிரஸ் கட்சி மற்றும் அர்ஜுன் சிங் ஆகியோரின் திட்டப்படி உருவான சதியே இந்த ஊழல் என பா.ஜ.க.கூறுவது தவறு. இந்த ஊழல் நடைபெற்று இருப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துறையில் உள்ளகுறைபாடுகள் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
எனவே தான், மத்திய அரசின் தவறான நிர்வாகத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டங்கள்பலவற்றை நடத்தி வருகிறது என்றார் ஜெய்ப்பால் ரெட்டி.
யு.என்.ஐ.