போர்ச்சுக்கல்: மேம்பாலம் இடிந்ததில் 70 பேர் பலி
லிஸ்பன்:
போர்ச்சுக்கல்லில் உள்ள ஒபார்ட்டோவில் உள்ள பாலத்தில் பஸ்சும் இரண்டு கார்களும் சென்று கொண்டிருந்த போது பாலம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்ட மக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் பஸ் மற்றும் கார்களில் பயணம் செய்தவர்கள்.
டியூரோ என்ற ஆறு பாயும் இடத்தில் கட்டப்பட்டுள்ள கேஸ்டிலோ டி பாய்வா மேம்பாலம் 116 வருடம் பழமை வாய்ந்தது. டியூரோ ஆற்றில் கடந்த சிலநாட்களாகத் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நீர்மட்டத்தின் அளவைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மேம்பாலம் இடிந்து விழுந்தது.
அப்போது இந்த மேம்பாலத்தில் 67 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பஸ்சும் எதிரே வந்த இரண்டு கார்களும் மோதிக் கொண்டு ஆற்றில்கவிழ்ந்தன. விபத்தில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கேஸ்டிலோ டி பாய்வா மேயர் பவுல் டெக்சாரியா கூறுகையில், மேம்பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது என்றும் இதை விரைவில் சரி செய்யவேண்டும் என்று பிரதமர் அன்டோனியோ கட்ரேஸிடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இந்த மேம்பாலத்தில் தினமும் 1,800 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன என்று அவர் கூறினார்.
யு.என்.ஐ.