ஜெயலலிதா வழக்கை எதிர்த்து தேர்தல் கமிஷன் மனு
சென்னை:
தமிழகம் உள்பட நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப்பயன்படுத்துவதில் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது என்று தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
மேலும் இந்தத் தேர்தலில் 1.3 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உபயோகிக்கப் போவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உபயோகிப்பதற்கு ஊழியர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும்,பொதுமக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப்பயன்படுத்துவதால் தேர்தலில் பல குழப்பங்கள் ஏற்படும்.
பலருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தத் தெரியாது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதிகள் ஜெயின் மற்றும் சம்பத் முன்னிலையில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் விதத்தையும், அதன் தொழில்நுட்ப திறன் ஆகியவை குறித்து நீதிமன்றத்தில் விளக்க முடியுமா என்பது குறித்து,தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது.
இதற்குத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிக அளவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
1951 ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1961 ஆண்டு தேர்தல் விதிமுறைகளின்படி நாடாளுமன்ற ஒப்புதலுக்குப்பிறகே மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களை உபயோகப்படுத்தத் தொடங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
1998 ம் ஆண்டிலிருந்து தேர்தல் ஆணையம் இதுவரை 1,01245 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உபயோகித்துள்ளது. இதில் 12 மின்னணுஇயந்திரங்கள் மட்டுமே சிறு, சிறு பிரச்சனைகளைக் கொடுத்துள்ளன.
சட்டசபைத் தேர்தலுக்கு மிகக் குறைவான கால அவகாசமே இருப்பதாலும், 1,30,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க வேண்டியிருப்பதாலும்இந்த வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் கூறியுள்ளது.
யு.என்.ஐ.