பூகம்ப நிதி திரட்ட கிளின்டன் இந்தியா வருகை
அகமதாபாத்:
குஜராத் பூகம்ப நிதி திரட்டுவதற்காக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் இந்தியா வருகிறார்.
குஜராத் பூகம்பத்திற்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவில் பல நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பில்கிளிண்டன்.இந்தியாவிலும் நிவாரண நிதி திரட்டுவதற்காக மும்பையில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
சிட்டி பேங்க் நடத்தும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்டணம் 10,000 ரூபாயாகும். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கிளிண்டனின் 4 நாள் இந்திய பயணத்தின் போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பூகம்பம் பாதித்த புஜ் நகருக்கு செல்கிறார்.
ஆசிய-அமெரிக்க-பசிபிக் தீவுகளுக்கான அதிபரின் ஆலோசனைக்குழு தலைவரான மைக் படேல் கிளிண்டனின் இந்திய பயணத்தை இறுதி செய்வதற்காகவிரைவில் இந்தியா வருகிறார்.
அகில உலக குஜராத்தி சொசைட்டி அமைப்பின் தலைவர் கிருஷ்ணகாந்த் வகாரியா தெரிவித்துள்ள தகவலில் கிளிண்டன் ஏப்ரல் 2ம் தேதி மும்பை வந்துசேர்வதாக தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்