பூசாரிகளுக்கு தனி வாரியம்: கருணாநிதி அறிவிப்பு
மதுரை:
பூசாரிகளுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று பூசாரிகள் மாநாட்டில் கருணாநிதி அறிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் 4 வது மாநில மாநாட்டில் பேசிய கருணாநிதி இதனை அறிவித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது:
பூசாரிகளுக்கான இந்த நலவாரியம் இந்து அறநிலையத்துறையின் கீழ் வராது. பூசாரிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இனி 4000 பூசாரிகள் வரைபயன்பெறுவர்.
பூசாரிகள் பேரவை கேட்டுக் கொண்டதற்கிணங்க வீடற்ற பூசாரிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வகை செய்யப்படும்.
12 லட்ச ரூபாய் செலவில் 1000 கிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தினமும் ஒரு வேளை பூஜை திட்டத்தின் கீழ் 2210 கோவில்கள் பயனடைய திட்டம் விரிவுபடுத்தப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 164 கோவில்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த கோவில் சீரமைப்புபணிகள் திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 598 கோவில்களில் மேறகொள்ளப்பட்டு வந்துள்ளது என்றார்.
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரிகள் வரம் தரமாட்டார்கள் என்பர் தமிழக மக்கள். அ.தி.மு.க.வின் ஜெயலலிதாமீண்டும் ஆட்சியை பிடிக்க கோவில் கோவிலாக சென்று தெய்வங்களை வேண்டி வருகிறார்.
ஆனால், கருணாநிதி, நேரடியாக பூசாரிகளிடமே தமது 5ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை கூறி மீண்டும்தி.மு.க.ஆட்சிக்கு வர ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
யு.என்.ஐ.