கூட்டணியை எதிர்த்து எஸ்.ஆர்.பி கொடும்பாவி எரிப்பு
கோவை:
கோவை தமிழ் மாநில காங்கிரசில், அ.தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு எதிர்ப்பு வலுக்கிறது. காரமடை அருகே எஸ்.ஆர் பாலசுப்ரமணியம், ஜெயந்திநடராஜன் ஆகியோர் கொடும்பாவியை அக்கட்சியினர் எரித்தனர். இதனால் காரமடையில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், அ.தி.மு.க கூட்டணி இறுதியானது. தொகுதி பங்கீடும் முடிந்த நிலையில் மறு பரிசீலனைசெய்ய வேண்டும் என ப.சிதம்பரம் விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரசில் புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிதம்பரத்தின் கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்துள்ளது. சிதம்பரத்தின் கருத்தை எதிர்த்து த.மா.கா தொண்டர்கள்அவருடைய கொடும்பாவியை திங்கள்கிழமையன்று சென்னையில் எரித்தனர்.
அதேசமயம், கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்,ஜெயந்தி நடராஜன் ஆகியோரது கொடும்பாவியை எரித்தனர்.
காரமடை அருகே உள்ள பொல்லாதி கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரசின் தொண்டர்கள் தலைமையை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
அப்போது ஜெயலலிதாவின் கைக் கூலி எஸ்.ஆர்.பி எனக் கோஷமிட்டனர். அவரது கொடும்பாவியை செருப்பால் அடித்து தீ வைத்துக் கொளுத்தினர்.இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டு ஓய்ந்தது.