வைகோ புகாரை மறுக்கிறார் கருணாநிதி
சென்னை:
கூட்டணியில் தான் கேட்ட தொகுதிகளை தரவில்லை என வைகோ கூறியுள்ள புகாரை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை மாலை நிருபர்களை சந்தித்த கருணாநிதி கூறியதாவது:
வைகோ தனது கட்சி வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகக் கூறி கொடுத்த இரு பட்டியல்களில் இருந்து தான் சீட்களை ஒதுக்கினோம்.அவர் கேட்ட தொகுதிகளில் இருந்து தான் 18 சீட்கள் ஒதுக்கப்பட்டன. மீதம் 3 தொகுதிகளை ஒதுக்குவதில் தான் பிரச்சனைஉள்ளது. இது தொடர்பாக இப்போது கூட பேசத் தயாராக இருக்கிறோம்.
ஆனால், தான் கேட்டதில் 12 தொகுதிகளை மட்டும் கொடுத்துவிட்டு மீதம் 9 தொகுதிகளை எங்கள் இஷ்டத்துக்கு அவருக்குக்கொடுத்துள்ளதாக வைகோ கூறுவது தவறு.
திமுகவை மதிமுக குறை கூறி வருவதும் வருத்தம் தருகிறது. இது போன்ற செயல்கள் கூட்டணியில் தேவையில்லாத குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். கூட்டணியை யாராவது விமர்சிப்பதை நினைத்தாலே என் மனம் வலிக்கிறது என்றார் கருணாநிதி.
ஊழல் குற்றம் புரிந்தவர்களை கூட்டணியில் சேர்த்தது தவறு என கூட்டணியிலிருந்து விலகிய வாழப்பாடி ராமமூர்த்திகூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டபோது, அதற்கு கருணாநிதி பதிலளிக்கவில்லை.