ஸ்பிக் வழக்கு: ஜெவுக்கு இன்னொரு அரசியல் அடி
சென்னை:
ஸ்பிக் பங்கு ஊழல் தொடர்பாக தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையை தடை செய்ய வேண்டும் என்றுகோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்திருந்த வழக்கை சென்னை முதலாவது தனி நீதிமன்றம்வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஸ்பிக் நிறுவன பங்குகளை வாங்கியதில் ரூ. 30 கோடி அளவுக்கு அரசுக்குநஷ்டம் ஏற்பட்டதாக கூறி சி.பி.ஐ. ஜெயலலிதா, ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா ஆகியோர் மீதுமுதலாவது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதைஏற்ற உயர்நீதிமன்றம், தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்த தடை விதித்தது. அதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில்,சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்தது. தனி நீதிமன்றத்தில் விசாரணை தொடரலாம் என்றும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து கடந்த 19-ம் தேதி மீண்டும் இந்த வழக்கு தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் அன்றுஜெயலலிதா சார்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விசாரணையை ரத்து செய்யகோரியிருந்தார்.
ஜெயலலிதாவின் மனுவை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், சுப்ரீம் கோர்ட் இந்தவழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே விசாரணையை ரத்து செய்ய முடியாதுஎன்று கூறி ஜெயலலிதாவின் மனுவை நிராகரித்தார்.
மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி ஆறுமுகப் பெருமாள்ஆதித்தன் உத்தரவிட்டார்.