பிரசாரத்தை திருச்சியில் துவக்குகிறது பா.ஜ.க.
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை திருச்சியில் தொடங்குகிறது.
கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான எல்.கே.அத்வானி பிரசாரத்தைத் துவக்கிவைக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு 21 தொகுதிகளும், திருச்சி எம்.பி. தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க. மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், தனது தேர்தல் பிரசாரத்தை திங்கள்கிழமை துவக்குகிறது பா.ஜ.க. திருச்சியிலுள்ள கொட்டப்பட்டுமைதானத்தில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அத்வானி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் அகில இந்தியபாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகளும் இதில் கலந்து கொள்கின்றன. தி.மு.க.கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள ம.தி.மு.க. சார்பிலும் அதன் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டத்தையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் யாரும் அசம்பாவிதச்செயல்களில் ஈடுபட்டு விடாமல் தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.