எதிர்த்தார்... எதிர்பார்த்தார்... ஏமாந்தார் தமிழ்க்குடிமகன்
சென்னை:
தி.மு.க. அமைச்சரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சராகவும், இந்து அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்தவர்தமிழ்குடிமகன்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவரது சொந்தத் தொகுதியான இளையான்குடி தொகுதியை திமுக அவருக்கு வழங்கவில்லை. அந்த தொகுதிபுதிதாக தி.மு.க கூட்டணியில் இணைந்த கண்ணப்பன் தலைமையிலான மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த தமிழ்க்குடிமகன் தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார்.
தமிழ்க்குடிமகனுக்கு அ.தி.மு.கவில் இளையான்குடி தொகுதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. சனிக்கிழமைஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்க்குடிமகன் பெயர் இடம் பெறவில்லை.
இளையான்குடியில் அ.தி.மு.க.சார்பில் வ.து. நடராஜன் என்பவர் போட்டியிடுகிறார்.
எந்த தொகுதி தனக்கு ஒதுக்கப்படவில்லை என்ற காரணத்தால் தி.மு.கவை விட்டு வெளியேறி வந்தாரோ அவருக்கு அந்த தொகுதி அ.தி.மு.கவிலும்தரப்படவில்லை.
அதற்கு பதிலாகவும் வேறு எந்த தொகுதியும் அ.தி.மு.க.சார்பில் அவருக்கு வழங்கப்படவில்லை.
தமிழ்க்குடிமகன் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக அவரது மகனை வேட்பாளராக தி.மு.க. நிறுத்தும் என தி.மு.க. தரப்பில்கூறப்பட்டது.
இது குறித்து தமிழ் குடிமகன் கருத்து கூறுகையில், தந்தையும், மகனையும் எதிரியாக்கும் கீழ்த்தரமான அரசியலில் தி.மு.க.இறங்கியுள்ளது என சாடினார்.
ஆனால் அதற்கு வாய்ப்பே அளிக்கவில்லை ஜெயலலிதா. தமிழ் குடிமகனுக்கு அ.தி.மு.கவில் தொகுதியே ஒதுக்கவில்லை.
இளையான்குடி தொகுதி ஒதுக்கப்படாததால் தனது தன்மானம் பாதிக்கப்பட்டதாக கூறி தி.மு.கவை விட்டு வெளியேறி வந்தார் தமிழ்க்குடிமகன்.தி.மு.கவில் அவருக்கு வேறு தொகுதி ஒதுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கோபத்துடன் வெளியே வந்தார் தமிழ்க்குடிமகன்.
இப்போது தமிழ்க்குடிமகனுக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. என்ன செய்யப் போகிறார்அவர்?












Click it and Unblock the Notifications