தமிழ்வழிக்கல்வி பயில்வோருக்கு வேலைவாய்ப்பு: பாமக
தர்மபுரி:
தமிழ்வழிக்கல்வி பயில்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாமக தேர்தல்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல்அறிக்கையின்முக்கிய அம்சங்கள் வருமாறு:
வருமானத்திற்கு அதிகமான அளவில் சொத்து சேர்க்கும் மக்களவை பிரதிநிதிகள், உயர் பதவி வகிப்பவர்கள்,அதிகாரிகள் ஆகியோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். மேலும்,இது தொடர்பாக புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டு அமல்படுத்துவோம்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரின் ஏழ்மை நிலையைக் கருதி அவர்களின் வாழ்வுமுன்னேற்றமடைய சிறப்பு அதிகாரம் கொண்ட நல வாரியம் அமைக்கப்படும்.
தமிழ்வழிக் கல்வியில் பயில்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க தேவையான நடவடிக்கைகள்மேற்கொள்வோம். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம். இந்தி மொழிதிணிப்பை எதிர்த்து போராடுவோம். தமிழை முதன்மை மொழியாக மாற்றுவோம்.
தமிழில் விளம்பரப் பலகைகள் வைக்காத தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின்லைசென்சுகளை ரத்து செய்வோம். அரசின் அனைத்துச் சலுகைகளும் இந்த நிறுவனங்களுக்கு ரத்து செய்யப்படும்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி, கல்விக்கு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை ஒதுக்கீடுசெய்தல் ஆகியவற்றை செயல்படுத்துவோம்.
சாதிவாரியாக மக்கள் தொகையை கணக்கெடுத்து அந்தந்த சாதிகளில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில்வேலை வாய்ப்பு, கல்வி, தனியார் துறையில் வேலை, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சாதி ஒழிப்பு, தீண்டாமைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து 50சதவீதமாக உயர்த்த பாடுபடுவோம்.
மகளிரை இழிவாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள், மற்றும் நடைமுறைகளை மாற்றுவோம். ஆண்டுக்கு ஒரு முறைஅன்னையர் தினம் கொண்டாடுவோம்.
பினாமியாக சொத்து சேர்த்து வைத்திருப்போரைக் கண்டறிந்து அவர்களிடம் இருக்கும் சொத்துக்களைப்பறிமுதல் செய்து ஏழை எளிய மக்களுக்குப் பகிர்ந்தளிப்போம்.
பாதுகாப்பான குடிநீர், தூய்மையான சுற்றுச் சூழல், தொழில் துறைக்கும் விவசாயத்திற்கும் தடையில்லாமல்மின்சாரம், மக்களுக்கு அவசியமான தேவையான எரிபொருள் சப்ளை ஆகியவற்றை சீராக்குவோம்.
சித்தமருத்துவம், யுனானி, ஆயுர்வேதம் ஆகிய பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்கும் வகையில் பரம்பரைமருத்துவ நலவாரியம் ஒன்றை அமைப்போம்.
மதவெறிச் செயல்களுக்குத் தடை விதிப்போம். மதம் மாறியவர்களுக்கும் அவர் முன்பு பெற்று வந்த சலுகைகளைதொடர்ந்து கிடைக்கச் செய்வோம்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு50 ஆயிரம் வழங்குவோம்.
எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கும் நாளில் அவர்களது சொத்துக் கணக்கை வெளியிடுவோம். தவறு செய்யும்மக்கள் பிரதிநிதிகளை மக்கள் திரும்ப அழைத்துக் கொள்ளும் வண்ணம் புதிய சட்டத் திருத்தங்களை கொண்டுவருவோம்.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இந்த தேர்தல் அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட, கட்சியின் தலைவர் ஜி.கே மணிபெற்றுக் கொண்டார்.