சேவாக் ரெக்கார்டை சமன் செய்த சாய் சுதர்சன்.. ஐபிஎல் வரலாற்றில் '5 அரைசதம்' அடித்து அசுர சாதனை!
அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், நடப்பு சீசனில் தனது 5-வது தொடர் அரைசதத்தை விளாசி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை குவித்தது. குஜராத் அணி தரப்பில் சாய் சுதர்சன் 53 பந்துகளில் 4 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 84 ரன்களையும், சுப்மன் கில் 37 பந்துகளில் 64 ரன்களையும், பட்லர் 27 பந்துகளில் 57 ரன்களையும் குவித்தனர்.

இதில் சாய் சுதர்சன் 35 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த சீசனில் சாய் சுதர்சன் தொடர்ச்சியாக அடிக்கும் 5வது அரைசதம் இதுவாகும். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் புதிய சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை விளாசிய 4வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பாக சேவாக் 2012 சீசனிலும், பட்லர் 2018 சீசனிலும், டேவிட் வார்னர் 2019 சீசனிலும் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை விளாசி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சாய் சுதர்சன் இந்த சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி ஆரஞ்சு கேப்பையும் கைப்பற்றியுள்ளார்.
14 இன்னிங்ஸில் ஆடியுள்ள சாய் சுதர்சன் ஒரு சதம், 7 அரைசதம் உட்பட 638 ரன்களை குவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக தொடர்ச்சியாக 3 சீசன்களில் 500 ரன்களுக்கு மேல் விளாசி சாதனை படைத்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் 527 ரன்களை குவித்திருந்தார். அதேபோல் கடந்த சீசனில் 759 ரன்களை விளாசி இருந்தார்.
இதனால் தமிழக வீரர் சாய் சுதர்சனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதை சாய் சுதர்சன் வழக்கமாக வைத்துள்ளார். எப்படி பட்லர் மும்பை அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக ஆடுகிறாரோ, அதேபோல் சிஎஸ்கே அணிக்கு எதிரான சாய் சுதர்சன் விளையாடி வருகிறார்.












Click it and Unblock the Notifications