சொத்து வரி விலக்கு யாருக்கு? பெயர் மாற்றம் எப்படி நடக்கிறது? பலரும் தவறவிடும் முக்கிய விஷயம் இதுதான்
சென்னை: சொத்து வரி செலுத்துவதில் உள்ள விலக்குகள் மற்றும் பெயர் மாற்ற நடைமுறைகளை அறியாமல் பலர் சிரமப்படுகிறார்கள்.. அதேபோல யாருக்கெல்லாம் வரி விலக்கு கிடைக்கும் என்பதையும், வரி ரசீதில் பெயர் மாற்றும் போது கவனிக்க வேண்டிய சட்டப்பூர்வ சிக்கல்கள் பற்றியும் பலர் அறிவதில்லை. அவைகளை பற்றி இங்கே இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
சொத்து வரி கட்டுவது ஒவ்வொரு வீட்டு உரிமையாளரின் கடமை. ஆனால், அரசு வழங்கும் வரி விலக்குகள் மற்றும் சலுகைகள் விஷயத்தில் பலருக்கும் தெளிவு இல்லை.

பொதுவாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் வரி விலக்கு உண்டு என்று நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், மாநில அரசின் குறிப்பிட்ட அரசாணைகளின் கீழ், சில குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மட்டுமே இவர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இது நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதி இல்லை.
அதேபோல், முழுமையான வரி விலக்கு என்பது மத வழிபாட்டுத் தலங்கள், அரசு சொத்துக்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சில தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இதை பெறுவதற்கே தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து, உள்ளாட்சி அமைப்பின் முறையான ஒப்புதலைப் பெற வேண்டும். பல உரிமையாளர்கள் இந்த விபரங்கள் தெரியாமல் வரி விலக்கிற்குத் தகுதியிருந்தும் முழு வரியையும் செலுத்தி வருவதுதான் கள நிலவரமாக இருக்கிறது.
சொத்து வாங்கிய பிறகு வரி ரசீதில் பெயரை மாற்றுவது, அதாவது 'Mutation of Property Tax Records' செய்வதை பலரும் அலட்சியப்படுத்துகிறார்கள். பத்திரப் பதிவு செய்த கையோடு இது நடக்காது.
பெரிய மாநகராட்சிகளில் ஆன்லைன் வசதி இருந்தாலும், சிறிய நகராட்சிகளிலும் சில பேரூராட்சிகளிலும் பெயர் மாற்றத்தை ஆன்லைனில் செய்தாலும், நேரில் சென்று ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டிய சூழல் இன்றும் உள்ளது. வரி ரசீதில் பெயர் மாறாமல் இருந்தால், பிற்காலத்தில் சொத்து விற்கவோ அல்லது வங்கி கடன் பெறவோ செல்லும்போது பெரிய சிக்கல்கள் ஏற்படும்.
அதேபோல , ஆன்லைன் வசதி வந்த பிறகு எல்லாம் சுலபம் என்று நினைப்பது தவறு. சர்வர் கோளாறுகள், அதிகாரிகள் பற்றாக்குறை எனப் பல காரணங்களால் பெயர் மாற்றம் தாமதமாகும்.
உதாரணத்திற்கு சமீபத்தில் ஒரு உரிமையாளர் சென்னை மாநகராட்சியில் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தபோது, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் கள ஆய்வு முடிந்து பெயர் மாற 12 நாட்களுக்கும் மேலாகியுள்ளது. இதுபோல இடத்துக்கு இடம் கால அளவு மாறும். சில இடங்களில் அதிகாரிகளின் கள ஆய்வுக்காக வாரம் கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும்.
சிறிய பிழை இருந்தால் கூட விண்ணப்பம் நிராகரிக்கப்படும், பிறகு மீண்டும் அலுவலகங்களுக்கு அலைய வேண்டியது வரும். ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டோம் என்று அமைதியாக இருக்காமல், அந்தந்த உள்ளாட்சி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தின் தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.
வரி ரசீது பெயர் மாற்றம் என்பது வெறும் காகித வேலை அல்ல, அது உங்கள் சொத்துக்கான சட்டப்பூர்வமான பாதுகாப்பு. எனவே, பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும்போது அனைத்து ஆவணங்களையும் கச்சிதமாக தயார் செய்து, அதிகாரிகள் கேட்கும் கூடுதல் தகவல்களை உடனடியாக வழங்கினால் மட்டுமே அலைச்சலைத் தவிர்க்க முடியும்.
வரி விலக்கு மற்றும் பெயர் மாற்றம் தொடர்பான விதிகளில் அவ்வப்போது மாற்றங்கள் வரும் என்பதால், உங்கள் பகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தின் சமீபத்திய அறிவிப்புகளை கவனிப்பது மிக முக்கியம். அரைகுறையான தகவல்களை நம்பி செயல்படுவதை விட, நேரடியாக அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வதே பிற்கால சிக்கல்களைக் குறைக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்...!!












Click it and Unblock the Notifications