அலை வரப் போகுது... இளங்கோவன் சொல்கிறார்
சென்னை:
தன் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது பற்றி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் பேசி வருவதால், நிச்சயமாக மக்களிடையே அவருக்கு அனுதாப அலைஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
வியாழக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும்போது,
இரண்டு தொகுதிகளில்தான் ஜெ. வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரதுகட்சியினர்தான் ஆர்வத்தில் கூடுதலாக இரண்டு இடங்களில் ஜெ. பெயரில் மனுத்தாக்கல் செய்துவிட்டனர்.
திமுகவின் சதி காரணமாகத்தான் ஜெ.யின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
"தெஹல்கா" விவகாரத்தில் பாஜக தலைவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். ஆனால்,ஜெ. விஷயத்தில் தனி நீதிமன்றம் தண்டனை மட்டுமே கொடுத்துள்ளது.
இத்தண்டனைக்கு எதிராக ஜெ. அப்பீல் செய்துள்ளார். இதன் முடிவு வந்தால்தான் அவர்குற்றவாளியா என்பது நிரூபணமாகும். அதுவரை அவர் குற்றமற்றவர்தான்.
என்னைப் பொறுத்தவரை ஜெ.தான் முதல்வராகப் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது.
அவர் முதல்வராக வராவிட்டாலும், யார் முதல்வர் என்பதைக் கூட்டணியின் பெரியகட்சியான் அதிமுகதான் முடிவு செய்யும் என்றார் இளங்கோவன்.
தமிழகத்தில் சோனியா பிரச்சாரம்:
தமிழகத்தில் சோனியா பிரச்சாரம் செய்வதற்கான சுற்றுப்பயணத் திட்டத்தைக் காங்கிரஸ்கமிட்டி தயாரித்து வருகிறது. இன்னம் 2-3 நாட்களில் இதன் விபரங்கள் தெரியவரும்என்று இளங்கோவன் கூறினார்.