நிலக்கோட்டையில் கலவரம்: அதிமுக - புதிய தமிழகம் தொண்டர்கள் மோதல்
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தொகுதியில் உள்ள விராலிப்பேட்டையில் அதிமுக கட்சித் தொண்டர்களுக்கும், புதிய தமிழகம் கட்சித்தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் கடும் தாக்குதலில் இறங்கினர். பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
வாக்குச்சாவடியில் இருந்த எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இரு கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இந்தச் சம்பவத்தில் புதிய தமிழகம் கட்சித் தொண்டர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உயிருக்குப் போராடிய நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து இரு கட்சியினரும் லாரிகளில் பல ஊர்களில் இருந்தும் ஆட்களைத் திரட்டிக் கொண்டு நிலக்கோட்டைக்குள் வந்து இறங்கியவண்ணம் உள்ளனர். இதனால் அங்கு கலவர சூழ்நிலை காணப்படுகிறது.
கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து இங்கு கூடுதல் போலீஸார் விரைந்துள்ளனர்.
வாக்காளர்களை ஊருக்குள் விட மறுத்த கிராமத்தினர்:
நிலக்கோட்டைத் தொகுதிக்கு உள்பட்ட கடகம்பட்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள்ஓட்டுப் போடுவது வழக்கம். ஆனால் கடகம்பட்டியில் உள்ள மக்கள், தங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள 3 கிராம மக்களைதங்கள் கிராமத்துக்குள் நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொடைக்கானல் - மதுரைதேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.