எக்ஸிட் போல் முடிவுகளை நம்பலாமா?
சென்னை:
தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் நடத்திய வாக்குச்சாவடி கருத்துக் கணிப்பு (எக்ஸிட் போல்) முடிவுகள்தமிழக வாக்காளர்கள், குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் முடிந்து விட்டது. வாக்காளர்கள் தங்களது கடமையைச் செய்து விட்டு ஓய்ந்து போயுள்ளனர்.முடிவுகள் வர வேண்டியதுதான் பாக்கி. அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை மக்கள் கேட்கத் துவங்கிவிட்டனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணி வரை நடந்த வாக்குப்பதிவின்போது வாக்களித்துவிட்டு வெளியே வந்தவர்களிடம், நீங்கள் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளைதூர்தர்ஷன் நிறுவனம் கேட்டது. அதன் அடிப்படையில் ஒரு கருத்துக்கணிப்பை அது வெளியிட்டது.
தூர்தர்ஷன் கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணிக்கு 47சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 48 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு 125இடங்களும், திமுக கூட்டணிக்கு 105 இடங்களும் கிடைக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளுக்கு 4இடங்கள் வரை கிடைக்கலாமாம்.
வாக்குச்சாவடிக் கருத்துக்கணிப்பு எந்த அளவு நம்பக் கூடியது? இதில் எந்தளவு உண்மையாகப் போகிறது என்பதுஉறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் உள்ளது.
காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, இதேபோல நடத்தப்பட்ட வாக்குச்சாவடி கருத்துக்கணிப்புமுடிவுகள் திமுக அணியினருக்குச் சாதகமாக இருந்தது. இதையடுத்து திமுக தரப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.ஆனால் முடிவுகள் வெளியானபோது தலைகீழாக இருந்தது. அதிமுக அணி பெரும்பாலான இடங்களில்வெற்றி பெற்றது.
வாக்களித்து விட்டு வந்த வாக்காளர்கள் பலர் சும்மா ஒரு பதிலைச் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். அதைநம்பி அனைவரும், ஆஹா திமுக அணிக்குத்தான் மீண்டும் வெற்றி என்று உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் பொய் சொல்லி விட்டார்கள் என்பது முடிவுகள் வெளியான பிறகுதான்தெரிந்தது.
அந்த நிலை மீண்டும் வருமா என்பது தெரியவில்லை. தூர்தர்ஷன் கருத்துக்கணிப்பு முடிவுகளில் 1 சதவீத அளவுக்குமட்டுமே வாக்கு வித்தியாசம் இருப்பதால் முடிவுகளில் மாற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளன.எனவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதுதான் யார் வெற்றி பெற்றது என்பதை தெரிந்து கொள்ளமுடியும்.