5.30 மணிக்கு ஜெ.முதல்வராகப் பதவியேற்கிறார்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 196 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், அதிமுக சட்டசபைக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு தமிழக முதல்வராகப்பதவியேற்கிறார்.
அதிமுக சட்டசபைக் குழுத் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் அவர் பிற்பகல் 1.30மணிக்கு கவர்னர் பாத்திமா பீவியை அவரது ராஜ்பவன் இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.
அப்போது தன்னை தமிழக முதல்வராகப் பதவியேற்க அழைக்குமாறு கூறினார். இதற்கிடையே அதிமுக கூட்டணிக்கட்சிகளான தமாகா தலைவர் மூப்பனார் மற்றும் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் ஆகியோர் ஜெயலலிதாதமிழக முதல்வராவதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்தனர்.
அதிமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக பதவியேற்கும்படி, கவர்னர் பாத்திமாபீவி கூறினார். அதன்படி, திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார்என்றார்.