19-ம் தேதி புதிய சட்டசபை கூடுகிறது
சென்னை:
தமிழக புதிய சட்டசபை மே 19-ம் தேதி கூடவுள்ளது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டஎம்.எல்.ஏக்கள் பதவியேற்கவுள்ளனர்.
தமிழகத்தின் 11-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 21-ம் தேதி முடிவடைகிறது. அதற்குள் அடுத்த சட்டசபையின்அதாவது 12-வது சட்டசபை உருவாக்கப்பட வேண்டும்.
12-வது சட்டசபையில் 133 இடங்களுடன் தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைத்துள்ளது. அதன்கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை ஆளுங்கட்சியாக இருந்த திமுக இப்போதுவெறும் 28 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாகியுள்ளது.
இந்த நிலையில், புதிய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வரும் 19ம் தேதிபதவியேற்கவுள்ளனர். இதற்கு வசதியாக 12-வது சட்டசபையை நிர்மாணிப்பதற்கான உத்தரவை ஆளுநர் பாத்திமாபீவி பிறப்பித்துள்ளார். அரசு அறிவிப்பில் இது வெளியாகியுள்ளது.
இதையடுத்து 19-ம் தேதி புதிய சட்டசபை கூடுகிறது. அன்று மாலை 3 மணிக்கு புதிய எம்.எல்.ஏ.க்கள்உறுப்பினர்களாக பதவியேற்கவுள்ளனர். அவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். அதற்கு முன்னதாக தற்காலி சபாநாயகருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
தற்காலிக சபாநாயகராக கருணாநிதி, அன்பழகன், அப்துல் லத்தீப், ஆற்காடு வீராசாமி, சோ.பாலகிருஷ்ணன்ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது. இவர்கள்தான் தற்போதைய உறுப்பினர்களில்மூத்தவர்கள்.
சட்டசபைக் கூட்டம் கூடுவதற்கு முன்பு அமைச்சரவையை விரிவுபடுத்த முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.இதற்கான ஆலோசனையில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
19-ம் தேதி காலை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில்ஆளுநர் பாத்திமா பீவி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.