வெயிலிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி?
சென்னை:
கடுமையான வெயில் கொடுமையிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி என்பது குறித்து வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை டாக்டர் அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 100 டிகிரி வரை வெயில் அடித்து வருகிறது. சென்னையில்கடுமையான வெயில் அடிக்கிறது. இந்த கடுமையான வெயிலில் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வரும்வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்ப்பது குறித்து சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் ஜார்ஜ் சாண்டி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
* குழந்தைகளால் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது கடினம். கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகரித்தால் குழந்தைகளின் உடலிலும் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு வெப்பக் காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளது.
* வெப்ப காய்ச்சலைக் கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள்: உடல் அசதி, வாந்தி, தலை சுற்றுதல், மயக்கம், ரத்த அழுத்த குறைவு போன்றவையே அந்த அறிகுறிகள். இந்த அறிகுறிகளைக் கண்டுபிடித்து சரியான சிகிச்சை தராவிட்டால் சன் ஸ்டிரோக் எனப்படும் வெப்ப அதிர்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.
* சன் ஸ்டிரோக் வந்தால் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பில் போய் முடியும் அபாயம் உண்டு.
* வெப்பகாய்ச்சலைத் தவிர்க்கும் வழிமுறைகள்: கடுமையான வெயிலில் போய் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும், கடும் வேலை, நீச்சல் அடிப்பது ஆகியவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். வெயிலில் நீண்ட தூரம் நடப்பது மற்றும் பிரயாணம் ஆகியவற்றைத் தள்ளிப் போட வேண்டும். பழச்சாறு, இளநீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும், மெல்லிய பருத்தி துணிகளையே அணிய வேண்டும், அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
* வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.