ஜெ. முதல்வரானதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதை எதிர்த்து டெல்லிஉச்சநீதிமன்றத்தில் பொதுநலன் கருதி 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வழக்கறிஞர்கள் கபூர் மற்றும் மனோகர் லால் சர்மா ஆகியோர் இந்த வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது:
எம்.எல்.ஏவாகப் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்படாத ஒருவர் எப்படி முதலமைச்சராக முடியும்?எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டது சட்டப்படி,தவறானதாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எம். எல்.ஏவாக இல்லாத ஒருவர் முதலமைச்சராவதற்கு இடமுள்ளதா?
சட்டப்படி, ஒரு அரசு ஊழியர், வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றிருந்தால் அவர் தனது பதவியைத் தொடரமுடியாது. ஆனால் ஜெயலலிதாவை மட்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்க அனுமதி அளித்தது எப்படி? என்றுகூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற கோடைவிடுமுறைக்கு முன் இந்த வழக்கு மீதான விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.
இதே போல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதை எதிர்த்துவழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டபோது, முறைப்படி, விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரைபொறுத்திருங்கள் என்றார்.
யு.என்.ஐ.