ஜிம்பாப்வே கிரிக்கெட்: முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி
பொலாவாயோ (ஜிம்பாப்வே):
ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இன்னும் 1 நாள் ஆட்டம் மிச்சமிருக்கையிலேயே இந்தியாவுக்கு இந்த சிறப்பான வெற்றி கிடைத்துவிட்டது.இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான தாஸ் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் சேர்த்தார்.
7 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களுடன் 4வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியினர்,விரைவிலேயே அடுத்தடுத்து மீதமிருந்த 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.
318 ரன்களுக்கு 2வது இன்னிங்ஸை ஜிம்பாப்வே இழந்துவிட்டது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்தியா தன்னுடைய 2வது இன்னிங்ஸை ஆரம்பித்தது. முதல்இன்னிங்ஸ் போல் அல்லாமல், இப்போது தாஸும் ரமேஸும் நிலைத்து நின்று ஆடத் தொடங்கினர்.
ஆனாலும் மட்டை போட்டுக் கொண்டிருந்த ரமேஸ், 61 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.தொடர்ந்து இறங்கிய வி.வி.எஸ். லட்சுமண் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.
மளமளவென்று ரன்களைக் குவித்த லட்சுமண், கிராண்ட் பிளவர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து,பெவிலியனுக்குத் திரும்பினார். லட்சுமண் 35 பந்துகளில் 38 ரன்களைக் குவித்திருந்தார். இதில், 5 பவுண்டரிகளும்,ஒரு சிக்ஸரும் அடங்கும். அப்போது இந்தியாவின் எண்ணிக்கை 132 ரன்கள்.
அதற்கப்புறம், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான தண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார் தாஸ். இருவரும் நின்றுநிதானமாக ஆடி, இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
54வது ஓவரின் 4வது பந்தில் தண்டுல்கர் எடுத்த 1 ரன் மூலம் ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது கிரிக்கெட்டெஸ்டில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
தண்டுல்கர் 49 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். துவக்க ஆட்டக்காரராக இறங்கிய தாஸ் 183பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடைய எண்ணிக்கையில் 10பவுண்டரிகளும் அடங்கும்.