சர்க்காரியா கமிஷன்: ஜெ.க்கு மூப்பனார் ஆதரவு
சென்னை:
சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் திமுக தலைவர் கருணாநிதி மேல் சட்டப்படி நடவடிக்கைஎடுக்க முடிந்தால் எடுக்கட்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனார் கூறினார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
சர்க்காரியா கமிஷன் மூலம் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார். இது சட்ட ரீதியாக சாத்தியம் ஆகுமா ஆகாதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால்,சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் எடுக்கட்டுமே!
அதிமுக கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியனும்தான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அப்படி இருக்கும் போது,பரிதி இளம்வழுதியைக் கைது செய்ததற்காக, திமுக மீது அதிமுக பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுஎன்று எப்படிக் கூற முடியும்?
காங்கிரசுடன் தமாகா இணையும் என்று அக்கட்சித் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளது குறித்து மகிழ்ச்சியைத்தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், நேரம் வரட்டும், பார்க்கலாம்.
ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமையுண்டு. திமுகவுக்கும் அந்த உரிமை உள்ளது.
ஆளுநரைத் திரும்பப் பெறமாட்டோம் என்று மத்திய அமைச்சர் அத்வானி கூறியுள்ளார். இப்போதுதான், அவர்நியாயமாகப் பேசியிருக்கிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் மதசார்பற்ற அதிமுக கூட்டணி தொடரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.ஆனால் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட இதரக் கட்சிகளின் விருப்பம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.கூட்டணிக் கட்சியினரிடையே மதச்சார்பற்ற நிலையில் மாறுபாடு ஏற்படாத வரையில் இக்கூட்டணி தொடரும்.
திமுக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி உள்பட பல கட்சிகளைச் சேர்ந்த சேர்ந்த 300 மாணவர்கள் என்முன்னிலையில் தமாகாவில் இணைந்துள்ளனர் என்றார் மூப்பனார்.