கோவை, நீலகிரியில் பருவமழை துவங்கியது
கோவை:
கோவை, நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரியில் பல இடங்களில் காற்றுடன் பெய்தமழையில் மரங்கள் வீழ்ந்தன. மின்சாரம் தடை பட்டது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் தற்போது பருவமழையின் காரணமாக தூறல்கள் தொடங்கியுள்ளன.அவ்வப்போது பெய்யும் இந்த மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவையில் கடந்த 4 நாட்களாக தூறல் விழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் கனமழை இல்லை. சிறு சிறுதூறல்களின் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
காலையில் துவங்கும் இந்த தூறல் இரவு வரை நீடிக்கிறது. இதனால், கோவையின் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இரவு நேரங்களில் இதமான குளிரும் நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில், பருவமழை நன்றாகவே உள்ளது. இந்த மழையால், தேயிலை விவசாயிகள்பயன்பெறுகின்றனர். தேயிலை மற்றும் தோட்டப் பயிர்கள் தழைக்கத் தொடங்கியிருப்பதால், நீலகிரி புதுப்பொலிவுடன் உள்ளது.
ஆனால், கடந்த 2 நாட்களாக காற்றுடன் பெருமழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் வலுவிழந்து கீழேசாய்ந்துள்ளன. இதனால், பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் உள்ள நீரேற்றுநிலையங்களில் தண்ணீர் ஏற்றப்படவில்லை. எனவே, இந்த கிராமங்களிலுள்ள பொதுமக்கள் மழை பெய்தும்தண்ணீரின்றி தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இப்பிரச்னையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் முழு அளவிலான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.