ஜெ. வழக்கில் சுதாகரனுக்கு கோர்ட் வாரண்ட்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தமாக, வரும் ஜூன் 27ம்தேதி சுதாகரன் தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவேண்டும் என்று வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு ஜெயலலிதா சொத்துசேர்த்ததாகக் கூறி, அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.
இவ்வழக்கில் ஜெயலலிதாவுடைய முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், தோழி சசிகலா, சசிகலாவின் அண்ணிஇளவரசி ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து, இந்த வழக்கில் வாதாடி வந்த அரசு வழக்கறிஞர்கள் ராஜிநாமாசெய்து விட்டனர். புதிய அரசு வழக்கறிஞர்கள் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இதனால் இவ்வழக்கின் மீதான விசாரணை வரும் ஜூன் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டயாரும் வியாழக்கிழமை கோர்ட்டில் ஆஜராகவில்லை.
தற்போது பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் சுதாகரனை ஜூன் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்வகையில், சிறை மாற்று வாரண்டைப் பிறப்பித்தார் நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன்.