தாயுடன் இணைய தயாராகிறது சேய்
சென்னை:
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவின்போது காங்கிரஸ், தமாகா இணைப்பு குறித்து அறிவிப்புவெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி, ஊழல்வாத அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்ததைக் கண்டித்து 1996-ல் உருவானது தமிழ்மாநில காங்கிரஸ். வெற்றிலை போட்டுக் கொண்டு, தொண்டர்களை வழி நடத்தி வந்த, அகில இந்திய அளவில்முக்கிய காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார், துணிச்சலுடன் எடுத்த முடிவு என்று அப்போது அனைத்துத்தரப்பினரும் பாராட்டினார்கள்.
பின்னர் திமுகவுடன் கூட்டு வைத்து மாபெரும் வெற்றியைப் பெற்றது தமாகா. காலப் போக்கில் திமுகவுடன்மனக்கசப்பு ஏற்பட திமுக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா. நாளடைவில் தாங்கள் எதற்காக பிறந்தோமோஅதையே மறந்து விட்டு மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தமாகா.
கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து சட்டசபைத் தேர்தலைச் சந்தித்ததுதமாகா. ஆனால் யாருமே எதிர்பார்க்காதபடி அமோக வெற்றியைப் பெற்றது அதிமுக-தமாகா கூட்டணி.
தேர்தல் முடிவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியுடன் தமாகா விரைவில் இணையும் என்ற பேச்சு எழுந்தது. காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கூட விரைவில் காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணையும், எங்களுக்குத் தலைவர்மூப்பனார்தான் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் எப்போது இணைப்பு அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு இரு கட்சித் தொண்டர்களின் மனதிலும்எழுந்தது. தற்போது அதற்கு காலம் கனிந்து விட்டதாகத் தெரிகிறது. ஜூலை 15-ம் தேதி முன்னாள் முதல்வர்காமராஜரின் பிறந்த நாள் விழா வருகிறது. இதை காங்கிரஸ் கட்சி பிரமாண்டமான அளவில் தமிழகத்தில்நடத்தவுள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள மூப்பனாருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே இந்த விழாவின்போது இருகட்சிகளின் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து இந்த விழாவில் கலந்துகொள்வது குறித்து விவாதிக்கவும், தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் வியூகம் வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்செயற்குழுக் கூட்டம் வருகிறது 21ம் தேதி நடைபெறவுள்ளது.
அனேகமாக சோனியா தலைமையில் நடைபெறவுள்ள காமராஜர் பிறந்த நாள் விழாவின்போது காங்கிரஸ்கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது.