இப்படியும் ஒரு கல்யாணம்!
பழனி:
கணவன் உயிருடன் இருக்கும் போதே, தன் காதலனைத் திருமணம் செய்து கொண்டார் ஒரு பெண்.
இந்தக் கல்யாணத்துக்கு அந்தப் பெண்ணுடைய பெற்றோரும், உற்றாரும், உறவினர்களும் வந்திருந்து வாழ்த்தினர்.
பழனி வாய்க்கால்பாலத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் ஒரு முறுக்கு வியாபாரி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்குத்திருமணமாகி ஓராண்டுகூட ஆகவில்லை.
திருமணமான அடுத்த மாதமே ஈஸ்வரி கர்ப்பமானார். இதனால், ஏழாவது மாதம் அவருக்கு வளைகாப்பு நடந்து,மதுரை-திருமங்கலம் அருகே கரடிக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார்.
அப்போதுதான், பக்கத்து கிராமமான சொறிக்கான்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஈஸ்வரிக்குப் பழக்கமானார்.இவரைக் கண்டதும் காதல் கொண்டார் ஈஸ்வரி.
அடுத்த 3 மாதத்தில் ஈஸ்வரிக்குக் குழந்தை பிறந்தது. ஆனால் இறந்தே பிறந்தது. இதைக் கேள்விப்பட்ட குமார், "பரவாயில்லை,போகட்டும். உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள். அப்புறமாக வந்து உன்னைக் கூட்டிச் செல்கிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
இந்நிலையில், காதலன் அண்ணாதுரையைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார் ஈஸ்வரி. இதற்கு, அவருடைய பெற்றோர்களும்சம்மதித்து விட்டனர். இதைத் தொடர்ந்து, அண்ணாதுரை-ஈஸ்வரி திருமணமும் நடந்துவிட்டது.
தன் மனைவிக்குக் "கல்யாணம்" முடிந்துவிட்டது என்பதைக் கேள்விப்பட்டு, ஓடி வந்தார் குமார். ஆனால் ஈஸ்வரி அவரிடம்எதுவும் பேசாமல், குமார் கட்டிய தாலியை மட்டும் திருப்பிக் கொடுத்து விட்டார்.
குமாருக்கு ஆதரவாக போலீஸாரும் பஞ்சாயத்தாரும் கூடிப் பேசிப் பார்த்தார்கள். ஆனால், எந்தவிதப் பலனும் இல்லை.
"தாலி மட்டுமா கொடுத்தேன். எங்கே என் பணமும் நகைகளும்?" என்று கண்ணீருடன் கேட்டார் குமார். ஈஸ்வரியின் குடும்பம்கஷ்டப்பட்ட போது, அவர்களுக்குக் குமார் கொடுத்த ரூ.5,000 மற்றும், 3 பவுன் தங்க செயினை அவர்கள் வேறு வழியில்லாதுதிருப்பிக் கொடுத்தனர்.
இது போக, "இனி உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை" என்றும் ஈஸ்வரியிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டார் குமார்.