சேலத்தில் குடும்பமே கூண்டோடு எரித்துக் கொலை
சேலம்:
சேலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் 3 பெண்களும் ஒருகுழந்தையும் அடங்குவர்.
நாமக்கல் மாவட்டம் மல்லசத்திரம் அருகில் உள்ளது கொளகொண்டை கிராமம். இங்கு ஒரு பகுதியில் தனியாக ஒரு குடிசை வீடுஉள்ளது.
இக்குடிசையில் குடியிருந்த அருக்காணி என்ற பெண்ணும், ஒன்றரை வயது குழந்தையும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.இந்த வீட்டிற்கு வெளியே குஞ்சம்மாள், பாப்பாத்தி, மணிகண்டன் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் இந்த வீட்டிற்கு வந்த சிலர், வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தினர். அப்போது வீட்டிற்குள் இருந்த இருவரின் அலறல்சத்தம் கேட்டு விழித்த வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்களும் எழுந்து கூக்குரலிட்டனர். அப்போது அந்தக் கும்பலைச் சேர்ந்தசிலர், அவர்களை வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் எரியும் வீட்டிற்குள் அவர்களை வலுக்கட்டயாமாகத் தள்ளியுள்ளனர்.
இதில், 5 பேரும் உயிருடன் எரிந்து இறந்தனர். இந்தச் சம்பவம் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட குஞ்சம்மாளும் மணிகண்டனும் கணவன்-மனைவி என்று கருதப்படுகிறது. எரிந்து போனஅருக்காணியின் கணவன் சந்திரன், ஒரு ராணுவ வீரராக பஞ்சாபில் பணியாற்றி வருகிறார்.
கொலை நடந்த வீடு தனியாக, ஒரு கிலோமீட்டர் தூரம் வரை யாரும் இல்லை. எனவே, இவர்களைக் காப்பாற்ற யாரும் வரஇயலவில்லை எனத் தெரிகிறது.
இதனாலேயே, இந்த சம்பவம் இரவில் நடந்திருந்தாலும், காலையில் மட்டுமே பொதுமக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனால் சம்பவ இடத்திற்கு போலீசாரோ, தீயணைப்பு படையினரோ, காலையில் தான் செல்ல முடிந்தது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.