மத்திய சிறைக் காட்சிகள் ...
சென்னை:
1.கருணாநிதியுடன் சேர்ந்து சிறைக்கு வந்திருந்த அவரது மனைவி தயாளு அம்மாள் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். முகத்தில் அதிர்ச்சி இன்னும் மறையாத நிலையில் சிறை வாசலில் நின்றிருந்தார். அவருக்குத் துணையாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் கருணாநிதி வீட்டார் இருந்தனர்.
2.சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட அவரை சிறைக்குள் அனுமதிக்காமல் சிறை வாசலிலேயே வெகு நேரம் நிறுத்தி வைத்திருந்தனர். அவரை எந்த சிறையில் அடைப்பது என்பதில் குழப்பம் நிலவியதால் அவர் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
3.கருணாநிதி மற்றும் ஸ்டாலினைப் பார்ப்பதற்காக வந்திருந்த பல தலைவர்கள் சிறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மெயின் ரோட்டிலேயே அனைவரும் நிறுத்தப்பட்டு விட்டனர். முன்னாள் எம்.எல்.ஏவும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தலையைச் சிலுப்பியவாறு காவல்துறை அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்படியும் அவர்கள் அசைந்து கொடுக்காததால், எங்களை உள்ளே விட்டால் என்னய்யா, தயவு செய்து உள்ளே அனுமதியுங்கள் அய்யா என்று கெஞ்சினார். அவரது கெஞ்சலைப் பார்த்து பரிதாபப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அவர் மற்றும் சிலரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.
4.அதிகாலை முதலே சிறை வாசலில் தவம் கிடந்த திமுக தொண்டர்களை விட பத்திரிக்கையாளர்கள் கூட்டம்தான் மிகப் பெரிதாக இருந்தது. இதனால் பத்திரிக்கையாளர்கள் யார், திமுகவினர் யார் என்று தெரியாமல் காவல்துறையினர் குழம்பினர். ஒருவரைப் பார்த்து நீங்கள் நிருபரே கிடையாது, நீங்க யார் என்று அதட்டலாக கேட்டார் ஒரு அதிகாரி. அதற்கு அந்த நபர் அதிர்ந்து போய், சார், நான் தந்தி (தினத்தந்தி நாளிதழ்) நிருபர் சார் என்று திருப்பிக் கத்தவே முகம் வெளிறிப் போய் அந்த அதிகாரி இடத்தைக் காலி செய்தார்.
5.சிறை வாசலில் குவிந்திருந்த திமுகவினர் காவல்துறையினரை கடுமையாக திட்டித் தீர்த்தனர். ஜெயலலிதா மற்றும் காவல்துறைக்கு கோஷமிட்டவாறு இருந்தனர். இருப்பினும்முகத்தில் எந்த உணர்ச்சியையும காட்டாமல் அமைதியாகவும், இறுக்கமாகவும் நின்றிருந்தார்கள் போலீஸார். தடியடி நடத்துமாறு அவ்வப்போது உயர் அதிகாரிகள் உத்தரவிட்டபோது தங்களது அத்தனை ஆத்திரத்தையும், முகத்திலிருந்து லத்திக்கு டிரான்ஸ்பர் செய்து திமுகவினரை அடித்துத் துவைத்து எடுத்து விட்டார்கள். சில நிருபர்களும் இந்த அடியிலிருந்து இதிலிருந்து தப்பவில்லை.
6.மத்திய சிறை மெயின் ரோட்டில் இல்லாமல் கூவம் நதியின் ஓரத்தில் அமைந்திருக்கிறது. அங்கு செல்ல சென்டிரல் ரயில் நிலையத்திற்குச் செல்லும் மேம்பாலத்திலிருந்துதான் செல்ல வேண்டும். எனவே கடை எதுவும் இல்லாததால், பத்திரிக்கையாளர்கள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் காய்ந்தனர். தண்ணீர் பாக்கெட்டுகளை விற்க வந்தவர்களைக் கூட போலீஸார் விரட்டி விட்டனர். இதனால் போலீஸாருக்கு அவ்வப்போது கொண்டு வந்து தரப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுக்களை கெஞ்சிக், கதறி பத்திரிக்கையாளர்கள் வாங்கித் தாகம் தீர்த்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications