சென்னை சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு
சென்னை:
மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் தன்னை சென்னை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல்செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து சனிக்கிழமை ஸ்டாலின் தானே சென்னை சைதாப்பேட்டைசெசன்ஸ் நீதிபதி அசோக் குமாரிடம் ஆஜரானார். அவரை 14ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி அவரை சென்னைசிறையில் அடைக்க வேண்டும் எனக் குறிப்பான உத்தரவையும் பிறப்பித்தார்.
ஆனால், கருணாநிதியையும் ஸ்டாலினையும் ஒரே சிறையில் வைக்க விரும்பாத அரசு ஸ்டாலினை மதுரை சிறைக்குக் கொண்டு சென்றது.போலீஸ் வேனிலேயே அவரை மதுரை கொண்டு சென்றனர்.
இந் நிலையில் மேம்பால ஊழல் வழக்கு விசாரனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அப்போது, ஸ்டாலினை மதுரைக்குக் கொண்டுசென்றதை மிகக் கடுமையாக கண்டித்த நீதிபதி இது தொடர்பாக அரசையும் கடிந்து கொண்டார். ஸ்டாலினை மதுரைக்குக் கொண்டுசெல்லும்போது ஏதாவது விபத்து நடந்திருந்தால் யார் பொறுப்பு எனக் கேட்ட நீதிபதி அவரை எதற்காக மதுரை கொண்டு சென்றீர்கள்எனவும் கேட்டார்.
ஸ்டாலின் மனு:
இந் நிலையில் ஸ்டாலின் சார்பில் அவரது வழக்கறிஞர் புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,சைதாப்பேட்டே செசன்ஸ் நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி என்னை சென்னை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார்.
என்னை சென்னை தவிர பிற சிறைகளில் அடைத்தால் எனக்கும் எனது மனைவிக்கு அது பாதுகாப்பாக இருக்காது என்பதைக் கூறித் தான்சென்னை சிறையில் அடைக்க நீதிபதியிடம் அனுமதி வாங்கினேன்.
ஆனால், அதை போலீசும் அரசும் மீறிவிட்டது. இதனால் எனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.