பாத்திமா பீவி .. சில பின்னணித் தகவல்கள்
சென்னை:
தமிழக மக்களை ஆண்டவன் காப்பாற்றட்டும் என்ற வேண்டுதலுடன் தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி திருவனந்தபுரம்கிளம்பிச் சென்றார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி அந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பு மிகச் சிறந்த பெயரைவைத்திருந்தவர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த அவர் சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். இந்தியாவின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். கேரள மாநிலத்தில்நீதிபதியாகப் பணியாற்ற பின் பெருமை மிகுந்த சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக உயர்ந்தார்.
தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகவும் இருந்துள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழக ஆளுநராக புதியவர்நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் பாத்திமா பீவிஆளுநராக நியமிக்கப்பட்டார்.
துவக்கத்தில் கருணாநிதிக்கும் அவருக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால் கருணாநிதி ஆட்சிக்காலத்தின்இறுதி ஆண்டுகளில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இரண்டு விஷயங்களில் உரசல் எழுந்தது. ஒன்று, சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் புதிய பிரிவைத் துவக்கியதற்கு ஆளுநர் போட்ட தடை, இரண்டு, மதுரை காமராஜர்பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தால் ஏற்பட்ட அதிருப்தி.
சென்னைப் பல்கலைக்கழகம் தனது செனட் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பின் ஒரு பிரிவை தமிழ்த்துறையில் துவக்கியது. ஆனால் என்னுடைய அனுமதி இல்லாமல் அதை எப்படித் துவக்கலாம் என்று கூறி அப்பிரிவுக்குத் தடைபோட்டு விட்டார் பாத்திமா பீவி. இது தமிழக அரசுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல பல தமிழறிஞர்களும்கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைழகத் துணைவேந்தராக சாலிஹு என்பவர் நியமிக்கப்பட்டபோது பல்கலைக்கழகத்தில் கடும் எதிர்ப்புஎழுந்தது. சாலிஹு திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.
மதுரை பல்கலைக்கழகத்திற்கே சம்பந்தம் இல்லாத ஒருவரை எப்படி துணைவேந்தராக நியமிக்கலாம் என்று பல்கலைக்கழகத்தில்கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசு பரிந்துரைத்த நபர்களையும் ஆளுநர் பாத்திமா பீவி நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்த இரண்டு விஷயத்திலும் கருணாநிதி அரசுக்கும், பாத்திமா பீவிக்கும் இடையே உரசல் எழுந்தது. மேலும், தன்னைமொழிவெறியர் என்று சித்தரிக்க தமிழக அரசு முயன்றதோ என்ற சந்தேகம் அவருக்கு வலுத்தது. இத்தனை விஷயங்களும்சேர்ந்துதான், ஜெயலலிதா அரசு கருணாநதி மீதும் மத்திய அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தபோது பேசாமல் இருந்துவிட்டார் பாத்திமா என்று விவரம் அறிந்தவர்கள் கருதுகிறார்கள்.
எப்படியோ, நல்ல நீதிபதி என்று போற்றப்பட்ட ஒருவர் கடுமையான விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டுதிரும்பிச் செல்வதைப் பார்த்த அனைவருக்கும் வருத்தமாகத்தான் இருந்திருக்கும்.