தாக்குதல்கள்...கைதுகள்: ஆளுனரிடம் நிருபர்கள் மனு
சென்னை:
சன் டிவி நிருபர் சுரேஷ் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற உத்தரவிடக் கோரி ஆளுனர்சி.ரங்கராஜனிடம் பத்திரிக்கையாளர்கள் போராட்டக் குழு மனு கொடுத்துள்ளது.
புழுத்த அரிசி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் விழுப்புரம் உணவுக் கிடங்குக்குள்அத்துமீறி நுழைந்ததாகக் கூறி சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரங்கராஜனை கவர்னர் மாளிகையில் சந்தித்த போராட்டக் குழு ஒரு மனுவைக் கொடுத்தது. அதில்,
தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.நிருபர்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஏதிர்த்துப் போராட்டம் நடத்தினாலும்தாக்குதல் நடக்கிறது.
பத்திரிக்கைகள் தங்களது சமூகக் கடமையை ஆற்ற முடியாத அளவுக்கு நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
சுரேஷ் ஜூன் 26ம் தேதி கைதானார். இதை எதிர்த்துப் போராடிய 150 நிருபர்களும் பத்திரிக்கை ஆசிரியர்களும்சென்னையில் கைது செய்யப்பட்டனர். அதே போல சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நள்ளிரவில் உட்காரவைக்கப்பட்டிருந்த கருணாநிதியை சந்திக்க முயன்ற 12 நிருபர்களும் கைது செய்யப்பட்டனர். மதுரை சிறையில்ஸ்டாலின் அடைக்கப்பட்டதை செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள், நிருபர்கள் மீதான அடக்குமுறைகளில் ஈடுபட்டவர்கள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு பத்திரிக்கையாளர்களின் போராட்டக் குழு கவர்னரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதைப் படித்துப் பார்த்த ஆளுனர் ரங்கராஜன் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பத்திரிக்கையாளர்களிடம்உறுதிமொழி அளித்தார்.
யு.என்.ஐ.