தஞ்சாவூரில் நில அதிர்ச்சி: பதட்டத்தில் மக்கள்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் நில அதிர்ச்சி காரணமாக, அப்பகுதி மக்கள் பதட்டமும்பீதியும் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காலிக்காடு கிராமத்தில், இந்த நில அதிர்ச்சியால் 21வீடுகளில் உள்ள சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. மேலக்காடு, கீழக்காடு ஆகிய கிராமங்களிலும் நில அதிர்ச்சிஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகளின் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டது, பூமியிலும் 40 அடி ஆழத்திற்குப்பள்ளம் ஏற்பட்டது.
இதனால் பயம் கொண்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து வீதியில் நின்று கொண்டனர். 7 வீடுகளின்மண் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. சில வீடுகளில், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து உடனடியாக மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதிராம்பட்டினம் போலீசாரும்,பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.
நிலஅதிர்வு குறித்து பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்தவர்கள் கூறுகையில், இரவு 9 மணிக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மண் சரிந்து விழுவது போலவும், துணியை கிழித்தால் ஏற்படும் சத்தம் போலவும் கேட்டது என்றனர்.
நில அதிர்வு ஏற்பட்ட காரணத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டிற்குள் செல்லாமல்வீட்டிற்கு வெளியிலேயே, வீதியில் நின்று கொண்டிருக்கிறார்கள். வீடுகளுக்கு வெளியிலேயே படுத்து உறங்கினர்.
ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும்போது ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாக, இந்த நில அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம்என்று கருதப்படுகிறது.