தென்னாப்பிரிக்காவில் இந்திய சாமியார்கள் அட்டூழியம்
துஷ்ட தேவதைகளைத் துரத்துவதாகக் கூறி தென்னாப்பிக்காவில் பணம் பறிக்கும் வேலையில் சில இந்திய போலிச்சாமியார்கள் இறங்கியுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
இங்குதான் இப்படி என்றால், தற்போது கடல் கடந்து தங்கள் திறமைகளைக் காட்டத்துவங்கியுள்ளனர் இந்தச்சாமியார்கள். ஆம், சாமியார்களின் லீலைகள் தென்னாப்பிரிக்கா வரை சென்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்து மற்றும் முஸ்லீம் பெண்களிடம் சென்று, அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும்அதிபயங்கர சக்தி தம்மிடம் இருப்பதாகச் சொல்லி ரூ 450 முதல் 7 ஆயிரம் வரை வாங்குகிறார்கள்.
அவர்களும், இவர்களைத் திறமைசாலிகள் என்று நம்பி கேட்ட பணத்தைக் கொடுத்து ஏமார்ந்து விடுகின்றனர்.
இதுபோல ஒரு சாமியார் தாம் இந்தியா சென்று மருந்து அனுப்புவதாகக் கூறி ஒரு அப்பாவிப் பெண்ணிடம் ரூ 2ஆயிரத்தை வாங்கியுள்ளார்.
மேலும் ஒரு முஸ்லீம் சாமியார் அங்குள்ள முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்து விட்டு பிறகு விலகிச்சென்றுள்ளார்.
பிறகு, அவர் தென்னாப்பிரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே அவ்வாறு செய்ததாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, தென்னாப்பிரிக்க இந்து சாமியார்கள் கவுன்சிலின் தலைவர் மதன்லால் மகராஜ் கூறுகையில், எங்கள்மீதுள்ள நம்பிக்கையை இது போன்ற சாமியார்கள் கெடுக்கிறார்கள் என்றார்.
முஸ்லீம் இளைஞர் இயக்கத் தலைவர் ரபீக் ஷா, இது போன்ற மோசடி பற்றி ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகக்கூறுகிறார். இனிமேலாவது மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.