மத்திய அமைச்சரானார் அஜீத் சிங்
டெல்லி:
ராஷ்டிரிய லோக் தளத்தின் (ஆர்.எல்.டி) தலைவர் அஜித் சிங் ஞாயிற்றுக்கிழமை மத்திய விவசாயத் துறைஅமைச்சராகப் பதவி ஏற்றார்.
திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த அஜீத் பாஞ்சாவும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தேசியஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சண்முகமும்,பொன்னுசாமியும்தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி. தங்கள் பதவியையும் ராஜினாமா செய்தனர்.
இதனால் மத்திய அமைச்சரவையில் 5 இடங்கள் காலியாக இருந்தன. ராஜினாமா செய்த அமைச்சர்கள் வகித்துவந்த பொறுப்புகள் மற்ற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டது.
திங்கள்கிழமை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருந்த நிலையில், மத்தியஅமைச்சரவையை விரிவு படுத்த பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டார். இது குறித்து ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனிடமும் விவரித்தார்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்.எல்.டி. தலைவர் அஜீத் சிங் மத்திய வேளாண்மைத் துறைஅமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் அஜீத்சிங்கிற்கு, கே.ஆர். நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலோ உத்திரப்பிரதேசத்தில் சட்டசபைதேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் ஆர்.எல்.டியுடன் கூட்டணி மைக்க தேசிய ஜனநாயக கூட்டணி முடிவுஎடுத்துள்ளது.
தற்போது ஆர்.எல்.டியைச் சேர்ந்த அஜீத் சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பதுதே.ஜ.க.-ஆர்.எல்.டி கூட்டணிக்கு முன்னோடியாகவே கருதப்படுகிறது.
அஜீத் சிங் மத்திய மந்திரியாக பதவி ஏற்றதன் மூலம் வாஜ்பாய் மந்திரிசபையின் எண்ணிக்கை 69ஆகஉயர்ந்துள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் 28பேர். மத்திய இணை அமைசர்கள் (தனிப் பொறுப்பு) 7 பேர், மத்தியஇணை அமைச்சர்கள் 34 பேர்.
இலாகாக்கள் மாற்றம்:
3 மந்திரிகளின் இலாகாவிலும் மாற்றங்கள் செய்துள்ளார் வாஜ்பாய். இதன்படி, இதுவரை மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்து வந்த திக் விஜய்சிங், தொழில்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக இருந்த உமர் அப்துல்லா இனி வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகிப்பார்.
வெளியுறவுத்துறையில் இணை அமைச்சராக இருந்து வந்த கிருஷ்ணமராஜு, இனி பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகிப்பார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விருப்பம்தெரிவித்திருந்ததால், அக்கட்சியை சேர்ந்த எம்.பிக்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஆனால் அஜீத் சிங்கிற்கு மட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.
யு.என்.ஐ.